சென்னை : தமிழ் சினிமாவில், சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்து குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றவர்களில் முக்கியமானவர்கள் சந்தானமும், சிவகார்த்திகேயனும். இவர்கள் இருவருமே விஜய் டி.வி-யில் காமெடி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள். அதிலேயே படிப்படியாக வளர்ந்து உயரம் தொட்டவர்கள். அதன் பின் சினிமாவுக்குள் நுழைந்து சந்தானம் நகைச்சுவை நடிகராக பிரபலமானார். சிவகார்த்திகேயன் தனுஷுடன் ஒரு முக்கிய ரோலில் நடித்து பிறகு ஹீரோவாகவும் வளர்ந்தார்.
நகைச்சுவை நடிகராக பிரபலமான சந்தானம், சிவகார்த்திகேயனைப் போல ஹீரோனாக வளர வேண்டும் என்று ஆசைப்பட்டார். 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' படத்தின் மூலம் நாயகனாக உயர்ந்தார். தொடர்ந்து 'இனிமே இப்படித்தான்', 'தில்லுக்கு துட்டு' ஆகிய படங்களில் நாயகனாக நடித்தார்.
சந்தானம் நடித்த படங்களில் 'தில்லுக்கு துட்டு' மட்டும்தான் வெற்றிகரமாக அமைந்தது. அடுத்து 'சர்வர் சுந்தரம்', 'சக்க போடு போடு ராஜா', 'ஓடி ஓடி உழைக்கணும்', 'மன்னவன் வந்தானடி' என நான்கு படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். இந்தப் படங்கள் சில சிக்கல்களால் ரிலீஸ் தள்ளிப் போகிறது. வி.டி.வி கணேஷ் தயாரிப்பில் சந்தானம் நடித்திருக்கும் 'சக்க போடு போடு ராஜா' படம் நாளை வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா, அனிருத் ஆகியோர் பாடல்கள் பாடியுள்ளனர்.
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'வேலைக்காரன்' படமும் நாளை வெளியாகிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பிரகாஷ்ராஜ், நயன்தாரா, ஃபகத் பாசில், ஸ்நேகா, சதிஷ், ஆர்.ஜே.பாலாஜி, ரோபோ சங்கர், விஜய் வசந்த் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடிக்கிறது. இருவருமே, விஜய் டி.வி-யின் மூலமாக சினிமாவுக்கு வந்தவர்கள் தான். இருவரும் முக்கிய இடத்தைப் பிடித்த பின்பு நேரடிப் போட்டியாக இந்த ரிலீஸ் கருதப்படுகிறது. இருவரின் படங்களும் நேரடியாக மோதிக்கொள்வது இதுவே முதல் முறை.
ஒரே நாளில் இருவரின் படங்களும் வெளியாவதால் சிவகார்த்திகேயன், சந்தானம் இருவருக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. 'வேலைக்காரன்', 'சக்க போடு போடு ராஜா' இரு படங்களில் எது வெற்றி பெறப் போகிறது என்பது ரசிகர்கள் கையில் தான் இருக்கிறது.